Tuesday, March 27, 2007

சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.

1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் ("ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் "உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.

அதற்கு அம்பேத்கர் " சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, "சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் "குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.



(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

நாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண்டும்

பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன். நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று; அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அடுத்து வடநாட்டில் ‘ராமநவமி' அன்று ‘ராமலீலா' என்ற பெயரில் தமிழ் மக்கள் - திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி ராவணன், கும்பகர்ணன் முதலானோர் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்து கொள்கின்றார்கள். நாம் பல தடவை கண்டித்தாகி விட்டது. இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான்; கடவுளைக் காண முயன்றான். இதன் காரணமாக வர்ணாசிரம தருமம் கெட்டு விட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, ராமன் சம்புகனை வெட்டினான். துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான். எனவே, இப்படிப்பட்ட ராமனை நாமும் ராமநவமி தினத்தில் எரித்து, வடவருக்கு உணர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது. இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம். அத்தனை பேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு.

இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும், இழி ஜாதி என்பதும் சட்டப்படி, சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மை சூத்திரர் என்று சொல்ல அஞ்சி, அடங்கி விட்டான். இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை. இப்படி இருந்தும் நமது சூத்திரப் பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே! காரணம் என்ன? பார்ப்பானே அடங்கி விட்டான்; ஜாதி இழிவு பற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன். இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழிதன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது? நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழிதன்மையில் உள்ளோம்.

தோழர்களே! இன்றைக்கு கடவுள் இருப்பது இடைவிடாத பிரச்சாரம் காரணமாக உலகில் இருக்கின்றதே ஒழிய, உண்மையில் எவரிடமும் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, நம்முடைய இழிவுக்கு இன்று கடவுள் நம்பிக்கை காரணமாகவும் இல்லை. இன்று நமக்கு உள்ள இழிவு நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டதுதான் என்று மீண்டும் கூறுகின்றேன். இனி மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவது மூலம் ஒன்றும் பிரயோசனம் இல்லை. உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும். நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும். சூத்திரன் அல்லாதவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆகும்.

நமது இழிவும், சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே! இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்? அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இனி நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை. நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம். நாம் இந்த இந்து மதப்படிதான் சூத்திரன். இது மாற வேண்டுமே! இது கடினமான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் தேடியாக வேண்டும். சட்டப்படி நீங்கள் சூத்திரன்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது. இதனை மாற்றுவது எளிதல்ல. ஒருகால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம். இதற்குப் பிரிவினை பிரசாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிட வேண்டும். அதற்காக நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறி விட்டால் - இஸ்லாமாகவோ, கிறித்துவனாகவோ மாறினால், அப்போதும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு விடுவோம். எனவே, அவைகளும் பயன்படாது. எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது, இன்றைக்குப் பெரிய சிக்கல். மக்கள் சிந்திக்க வேண்டும். மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன். அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து, கையொப்பம் வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலும் வரும்.

எனவே, நமது இழி நிலை மாற, நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது. குளித்து மூழ்கி கோயிலுக்குப் போனாலும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள். ஏன் இப்படி நிற்கின்றீர்கள்? நீங்கள் தாழ்ந்தவர்கள், தீண்டப்படாதவர்கள்; அதற்கு மேல் போனால் கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நம் மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்கவும் மக்கள் கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

(22.7.73 அன்று பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2ஆம் ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை)